சட்ட பின்னணி
நெல் சந்தைப்படுத்தும் சபை 1971ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அரச நிறுவனமாகும்.
பணிப்பாணை
நெல் சந்தைப்படுத்தும் சபையின் பணிப்பாணை பின்வருமாறு அமைகிறது,
- நெல் மற்றும் அரிசி என்பவற்றைக் கொள்வனவுசெய்தல், விற்பனைசெய்தல், வழங்குதல் மற்றும் விநியோகித்தல்.
- நெல்லைப் பதப்படுத்தும் மற்றும் அரைக்கும் வியாபாரத்தை மேற்கொள்ளுதல்.
- மேலே (அ) மற்றும் (ஆ) ஆகிய பந்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கத்தை அடைவதற்கு நேரிடக்கூடிய அல்லது பயன்தரக்கூடிய அத்தகைய ஏனைய வியாபாரங்களை மேற்கொள்ளுதல்.
- சபை அதன் வியாபாரத்தை சரியானமுறையில் மேற்கொள்ளுவதை வசதிப்படுத்துவதற்கு அவசியம் எனக் கருதுகின்ற ஏனைய அனைத்து விடயங்களையும் செய்தல்.
நிறுவன வரலாறு
காலம் 1948 - 1971
அரசாங்கம் உத்தரவாத விலை திட்டத்தின் கீழ் கமநல சேவைகள் திணைக்களத்தின் ஊடாக நெல்லைக் கொள்வனவு செய்தது.
காலம் 1972 - 1978
நெல்லைக் கொள்வனவுசெய்தல், களஞ்சியப்படுத்துதல், அரைத்தல் ஆகிய பணிகள் 1972ஆம் ஆண்டு நெல் சந்தைப்படுத்தும் சபையினால் (நெசச) பொறுப்பேற்கப்பட்டன. நெல் சந்தைப்படுத்தும் சபையின் சார்பில் கூட்டுறவு நிலையங்கள் விவசாயிகளிடமிருந்து நெல்லைச் சேகரித்தன. அவற்றைப் பதப்படுத்தி அரைப்பதற்கு தனியார் ஆலைகளை வாடகைக்கு அமர்த்தின. ஆலை உரிமையாளர்கள் அரிசியை உணவு ஆணையாளர் திணைக்களத்தில் ஒப்படைத்தனர். அதன் பின்னர் அவற்றைப் பங்கீட்டுமுறையில் நுகர்வோருக்கு விநியோகிப்பதற்காக கூட்டுறவு நிலையங்களுக்கு ஒப்படைக்கப்பட்டன. நெல் சந்தைப்படுத்தும் சபை ஒவ்வொரு பிராந்தியத்திலும் அதன் பிராந்திய களஞ்சிய சாலைகளைப் பயன்படுத்தி அரிசியை 'தொகையாகக் களஞ்சியப்படுத்தும் திட்டத்தை'ப் பேணிவந்தது.
காலம் 1978 - 2000
நெல்லை/அரிசியை சந்தைப்படுத்தும் அரசாங்கத்தின் பாத்திரம் 1977ஆம் அண்டு தாராள பொருனாதார கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மாற்றமடைந்தது. 1978ஆம் ஆண்டு நெல் சந்தைப்படுத்தும் சட்டம் திருத்தப்பட்டு போட்டிநிலையை அடிப்படையாகக் கொண்டு அரிசியை சந்தைப்படுத்துவதில் ஈடுபடுவதற்கு தனியார்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது. போட்டிநிலை தோன்றியதன் விளைவாக நெல்லைக் கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் சந்தைப் பங்கில் கடுமையான வீழ்ச்சி காணப்பட்டது. 1990ஆம் ஆண்டு 2,560 ஊழியர்களுக்கு நட்டஈடு வழங்கி சேவை நீக்கம் செய்ததன் காரணமாக ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டு நெல் சந்தைப்படுத்தும் சபை செயலிழந்தது. நெல் சந்தைப்படுத்தும் சபையைக் கலைத்துவிடுவதற்கு 2000ஆம் ஆண்டு ஏப்பிறல் மாதம் 5ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு ஒரு மனு சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அது வெற்றியளிக்கவில்லை.
காலம் 2006 - 2007
கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், கூட்டுறவு வலையமைப்பு மற்றும் விவாசாய அமைப்புகள் என்பவற்றின் ஊடாக நெல்லைக் கொள்வனவுசெய்வதற்கு கம்பனிகள் பதிவு சட்டத்தின் கீழ் 2006ஆம் ஆண்டு இலங்கை விவசாய உற்பத்திகள் சந்தைப்படுத்தல் அதிகாரசபை நிறுவப்பட்டது. ஐந்து பயிர்ச்செய்கை வலயங்களிலிருந்து நெல்லைக் கொள்வனவுசெய்வதை ஐந்து முகாமையாளர்கள் கையாள்வது மற்றும் அதை ஐந்து உதவி ஆணையாளர்கள் மேற்பார்வை செய்வது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட பொறிமுறையாக இருந்தது. ஆயினும் போதியளவு பணியாட் தொகுதியினர் இன்மையால் அந்தப் பணி வெற்றியளிக்கவில்லை.
காலம் 2008 - இன்றுவரை
நெல் சந்தைப்படுத்தும் சபையை மீள அமைப்பதற்கு அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஒரு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு 2007.07.25ஆம் திகதி அங்கீகரிக்கப்பட்டது. புதிய பணிப்பாளர் சபை 2007.09.01ஆம் திகதி நியமிக்கப்பட்டது. மீள அமைக்கப்பட்ட நெல் சந்தைப்படுத்தும் சபையின் முதலாவது சபை அமர்வு 2008.01.09ஆம் திகதி இடம்பெற்றது. நெல் சந்தைப்படுத்தும் சபை 2008 சிறுபோகத்தில் நெல்லைக் கொள்வனவுசெய்யும் பணியை மீள ஆரம்பித்தது.
பிரதான வியாபார பின்னணி
சோறு இந்த நாட்டின் பிரதான உனவாகும். இலங்கை உணவில் பிரதான கலரியை அது வழங்குகிறது. ஆகவே இலங்கையின் விவசாய துறையில் நெல் முக்கியமான பங்கை வகிக்கிறது. 2011ஆம் ஆண்டில் அது விவசாயத் துறையின் மொத்த தேசிய உற்பத்திக்கு 12 சதவீத பங்களிப்பையும் மொத்த தேசிய உற்பத்திக்கு 1.7 சதவீத பங்களிப்பையும் வழங்கியுள்ளது. நெல் விவசாயத்திற்கு 2011ஆம் ஆண்டு பெருமளவு நிலப்பரப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. நெல் விதைக்கப்பட்ட மொத்த நிலப்பரப்பு 650,000 ஹெக்டயராகும். பொதுவாக நெற்செய்கைக்கு நிரந்தர விவசாய நிலத்தில் 45 சதவீதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான நெல் விவசாயிகள், அதாவது 70 சதவீத விவசாயிகள், 1 ஹெக்டயாருக்கும் குறைந்த நிலத்திலேயே நெல் விவசாயம் செய்கின்றனர். நெல் பெரும்போகம் சிறுபோகம் என இரு போகங்களில் பயிர்ச்செய்யப்படுகின்றது. பெரும்போகம் (ஒக்டோபர் முதல் மார்ச் வரை) வழமையாக வருடாந்த உற்பத்தியில் 65 சதவீதத்தைக் கொண்டிருக்கிறது. எஞ்சிய 35 சதவீதம் சிறுபோகத்தில் (ஏப்பிறல் முதல் செப்டம்பர் வரை) கிடைக்கிறது. நெல் விவசாயத்தில் மூன்றில் இரண்டு பங்கு நீர்ப்பாசனத்தில் மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் நெற் பயிர் பெரிதும் மழை வீழ்ச்சியிலேயே தங்கியிருக்கின்றது. நெல் அரைக்கப்பட்டதன் பின்னர் அரிசி என அழைக்கப்படுகின்றது. சராசரி தனிநபர் அரிசி நுகர்வு 300 கிராம்களாகும். அத்துடன் அது நாளொன்றுக்கு 1,050மு கலோரியை வழங்குகின்றது. அது தனிநபர் புரதத் தேவையில் 45 சதவீதத்தை ஈடுசெய்கின்றது. குறிப்பாக இலங்கைப் பொருளாதாரத்தில் நெல் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதால் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் நெல்லில் தன்னிறைவடைவதற்காக நெல்லுற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தின. ஆகவே நெல்லுற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்கு பாரியளவில் முதலீடுகள் ஊக்குவிக்கப்பட்டன.
அத்துறையின் செயலாற்றுகையை மேம்படுத்துவதற்கு பாரியளவிலான் நீர்பாசனத் திட்டங்கள், காணி அபிவிருத்தி மற்றும் குடியேற்றத் திட்டங்கள், இலவச நீர்ப்பாசனம், பசளை மானியம், உத்தரவாத விலை என்பன துறைசார் செயலாற்றகையை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட சில முதலீடுகளாகும். இது நாட்டின் நெல் வேளாண்மையை மேம்படுத்தியது. அத்துடன் தற்பொழுது நாடு தன்னிறைவடையும் நிலையிலிருக்கிறது. இலங்கையில் சந்தைக்கு வருகின்ற நெல் உற்பத்தியில் பாதிக்கு மேற்பட்டது மிகையானதாகவே வருகின்றது. இந்த மிகை நெல்லை சந்தைப்படுத்துவதில் அரசாங்கமும் தனியார்துறையும் பிரதான பங்குகளை வகிக்கின்றன. இருப்பினும் கடந்த ஆண்டுகளில் இக் குழுக்களின் செயற்பாட்டு நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது.